கனவுலகம்-7

இதுவரை அவன் கணினி வரைகலை எப்படி இருக்கும்/இயங்கும் என்று யூகித்திருந்தானோ அப்படியே இருந்தது. ஆச்சயம் தாளவில்லை அவனுக்கு, தன்னம்பிக்கை நிறைய வளர்ந்த நாள் அது.

அப்போது கணினிவரைகலைத்தொழில் ஒரு சிலரின் பிடியிலிருந்தது அவர்கள் யாருக்கும் கற்றுத்தருவதை, போட்டியை உருவாக்குவதாக நினைக்கிறார்கள் என்று உணர்ந்துகொண்டான்.

பின்னர் பயிலகத்தில் விரிவுரையாளர்களுக்கு நடந்த ஆட்டோ கேட் (Auto CAD) பயிற்சிப்பட்டறையில் பார்வையாளனாக அனுமதி பெற்று கலந்துகொண்டான். நுணுக்கங்கள் விளங்கின, கலை கைவந்தது.

பெயிண்ட் நிறுவனத்தில் பணியைத்தொடர்ந்துகொண்டிருந்தான், ஆனால் அதில் அவனுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கவில்லை. கணினி வரைகலையை (Computer Graphics) பகுதி நேரத்தொழிலாக கைக்கொள்ள முனைந்தான்.

அப்போது மிகுந்த வாக்குசாதுரியம் உள்ள ஒருவனை எதேச்சையாக சந்தித்தான், இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஈர்க்கவே, சேர்ந்து தொழில் தொடங்க முடிவு செய்தனர். அவனுடைய தந்தையும் அவன் வேலையை விட அனுமதிதார்.

வெளிவேலைகளையும் நிர்வாகத்தையும் அவனுடைய பங்காளி செய்வதாகவும், கணினிவரைகலைப்பணிகளையும், வகுப்புக்களையும் அவன் செய்வதாகவும் முடிவாயிற்று. ஆம் இந்தக்கலை ஆர்வமுள்ள அனைவருக்கும் கற்பிக்கப்படவேண்டும் என்று அவன் விரும்பினான். ஆட்கள் பணிக்கு சேர்க்கப்பட்டனர், நிறுவனம் துவங்கியது.

இரண்டாண்டுகள் கழிந்தன, வியாபாரம் அவ்வளவு வளரவில்லை. முதல்மட்டும் கரைந்துகொண்டே இருந்தது, மிகவும் தாமதமாகத்தான் தன் பங்காளியின் குணத்தையும் பணம் மாயமான காரணத்தையும் அறிந்துகொண்டான்.

தொழில் நுட்பத்தில் 'நுட்பம்' மட்டுமே தனக்கு கைவந்திருக்கிறது 'தொழில்' தனக்கு சுத்தமாக தெரியவில்லை என்றும் உணர்ந்தான்

மிகவும் தாமதமாகிவிட்டது, பங்காளி ஏகத்துக்கும் ஏமாற்றி பலரிடம் கடன் வாங்கியிருந்தான், அத்துடன் ஒருநாள் ஓடிவிடக்கூடும் அதன்பிறகு அவன் நிலை? தந்தையுடன் கலந்தாலோசித்தான், தன்னுடைய முதலீட்டையும், இரண்டு வருட உழைப்பையும் இழந்தால் கூட சமாளிக்க முடியும் ஆனால் அந்தப்பெருங்கடனில் மூழ்கிவிட்டால் பின்னர் எழவே முடியாது என்பதை அவர்கள் வெகுவாக உணர்ந்தனர்.

எல்லாவற்றையும் உதறினான், பங்காளியால் பலமாக மிரட்டப்பட்டான், ஆயினும் ஒரு வழியாக வெளியேறினான். மனது கனத்தது, வலித்தது. பின்னர் பங்காளிமீது வழக்குத்தொடர்ந்தான், பங்காளி ஊரைவிட்டு ஓடிவிட்டதால் அந்த வழக்கில் அவனுக்கு பலனேதும் கிட்டவில்லை. அதற்குப்பதிலாக அந்த நிறுவனத்தின் பங்குதாரன் என்ற முறையில் அவனை வேறு வழக்குகள் மிரட்டின.

தந்தையின் வெகுநாள் சேமிப்பை கரைத்துவிட்ட வருத்தமும், வெகுளித்தனத்தால் விளைந்த ஏமாற்றமும் அவனை துடிதுடிக்க வைத்தது.

இவ்விஷயங்களை மனதைவிட்டு அகற்றாவிடில் அவை அவனைக்கொல்லும் என்று உணர்ந்தான். அடங்கு அடங்கு உனக்குள் நீ அடங்கு என்று மனதுக்கு ஆணையிட்டான். இது இன்னும் ஒரு கூட்டுப்புழுப்பருவம், என்தாயின் கருவறைக்குள் எப்படி ஒடுங்கிக்கிடந்தேனோ அப்படி மனம் ஒடுங்குவேன், உள்ளுக்குள் வளர்வேன், மீண்டும் வருவேன், மீண்டு வருவேன் என்று மனதுக்குள் உருவேற்றினான்.

ஆறுமாதம் அவன் கணினியும் தானுமாக மூழ்கினான், மேலும் நுட்பம் பயின்றான். பின்னர் மெல்ல மீளத்துவங்கினான். தனியே தொழில் துவங்கினான். இப்போதும் அவன் தன் லட்சியத்தை அடைந்துவிட்டதாக நினைக்கவில்லை. அதை நோக்கிய பயணத்திலிருப்பதே அவனுக்கு ஆத்மதிருப்தியை கொடுத்து வருகிறது.

சிறுசிறு சம்பவங்களும் வாய்ப்புக்களும் ஒருவனுடைய வாழ்க்கைப்பாதையை எப்படியெல்லாம் மாற்றிவிடுகின்றன, பார்த்தீர்களா?

உதாரணத்துக்காக ஒரு மாமேதையின் வரலாற்றை நான் எடுத்துக்கொள்ளவில்லை நம்மிடையே உலவும் சாமானியன் ஒருவனுடைய வாழ்க்கையைத்தான் சொல்லியிருக்கிறேன்.

உங்களுடைய வாழ்வையே எடுத்துக்கொள்ளுங்களேன், எத்தனை திருப்பங்களை சந்தித்திருக்கிறீர்கள், எவ்வளவு தூரம் கடந்திருக்கிறீர்கள்!

சரியான சந்தர்ப்பத்தில் சரியான வாய்ப்பு மட்டும் கிடைத்திருந்தால் என் வாழ்க்கை எவ்வளவோ மகிழ்சிகரமாக இருந்திருக்கும் என்று நீங்கள் நினைத்ததில்லையா?

அனிமேஷன் எனப்படும் அசைபடக்கலையின் அடிப்படைகளை எளிதில் புரிந்து பயிலும் வண்ணம் ஒரு செயலியை நம் தமிழ் சமுதாயத்திற்காக உருவாக்கியுள்ளேன். அது எவர் வாழ்விலேனும் திருப்புமுனையாய் அமையுமெனில் அதுவே இப்பிறவியெடுத்ததின் பயனாய் எண்ணி மகிழ்வேன்.

சிங்கையின் சுதந்திர தினமான இன்று அதை வெளியிடுவதில் மகிழ்சி கொள்கிறேன்.

சுட்டி: http://www.shockwave-india.com/tamil/kanavulagam/

இச்செயலியை பயன்படுத்த உங்களுக்கு பயிற்சியேதும் தேவைப்படாது என்று நினைக்கிறேன். உங்களுக்கு புரிந்தபின் உங்களால் இயன்ற அளவு இதை சிறார்களுக்கும் சொல்லிக்கொடுங்கள்.

மேலும் ஒரு விளக்கக்கட்டுரையோடு மீண்டும் வருகிறேன்

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!

கருத்துகள்

ரவி ஸ்ரீநிவாஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
i have a highspeed net connection, yet it did not work even after few minutes.will try again.all the best.it is nice that you are interesting in creating such tools.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
can read this tamil font :(. help me . i've TSCII font,IE6,Win98 in my PC.
regards
kalps

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு