கனவுலகம்-1

கோபம் கோபமாக வந்தது அந்த சிறுவனுக்கு

"தூர்தர்ஷனுக்கு ஒரு சோப்பு பிடிச்சிருந்தா அதை மட்டும் வாங்கிக்க சொல்லலாமே! அதை விட்டுட்டு ஆயிரம் சோப்பைக்காட்டி இது இப்டி சிறந்தது, அது அப்டி சிறந்ததுன்னு மாத்தி மாத்தி சொல்லி ஏன் குழப்பறாங்க?", விளம்பரத்தின் விளக்கம் புரியாதவன் தந்தையிடம் கேட்டான்.

தந்தை மென்மையாக சிரித்தார். காலப்போக்கில் அவனே புரிந்துகொள்வான் என நினைத்தவர், பதிலேதும் கூற வில்லை.

ஆனாலும் அவனுக்கு அவரே வழிகாட்டி, jungle book படத்துக்கு அழைத்துச்சொன்ற போது, கார்ட்டூன் படங்கள் தாள்களின் வினாடிக்கு 24 படங்களாக அசைவு மாற்றங்களை வரைந்து தயாரிக்கப்படுகிறது என்று விளக்கினார். "அம்மாடி! இந்தனை படம் வரைந்தால், வரைபவருக்கு கை வலிக்காதா", என்று அப்போது அவன் நினைத்துக்கொண்டான்.

ஆர்வமுடன் அவனை star wars படங்களுக்கு அழைத்துச்சென்றார். கதையேதும் புரியாதபோதும், கண்கள் மின்ன, லேசர் கத்திகளின் வீச்சையும் ரோபாட்களையும், வினோத ஜந்துக்களையும் வியப்போடு பார்த்தான். அவை அவன் கற்பனையிலும் தொடர்ந்தன.

ஐந்தாம் வகுப்பு பள்ளி அறை, பக்கத்தில் அமர்ந்திருந்த வகுப்புதோழி பெருமை பொங்க கையில் வைத்திருந்த சிறு புத்தகத்தை மின்னலாய் காட்டிவிட்டு மறைத்துக்கொள்கிறாள்

"ஏய் மஞ்சு, என்னது அது? ஒழுங்கா காட்டு", என்றவுடன் அவள் புத்தகத்தை வளைந்து பக்கங்களை படபடவென புரட்டி ஓடச்செய்தாள்.

"அய்யோ!", வியப்புதாளாமல் கூவினான், தனித்தனியே பார்க்கும் போது சாதாரண புகைப்படதொகுப்பாய் தென்பட்ட அது புரட்டும் போது திரைப்படம் போல ஓடியது. அப்பாவின் விளக்கம் அன்றுதான் அர்த்தமானது, அடுத்தடுத்த படங்களுக்கிடையே சிறு மாற்றம் இருப்பதை உணர்ந்தான்.

அதன்பிறகு கனமான புத்தகங்களில் வலப்புறம் எழுத்துகளுக்கு பிறகு உள்ள காலியிடங்களை (margin) தனது கார்ட்டூன்களால் நிரப்பினான். துள்ளிகுதிக்கும் பந்து, சுற்றி சுழலும் எழுத்துக்கள், மோதிக்கொள்ளும் கப்பல்கள் என அவனுடைய கார்ட்டூன் பட்டியல், புத்தகங்களில் இடம் உள்ளவரை நீண்டுகொண்டே போனது.

ஆறாம் வகுப்பு இருபாலர் வகுப்பு அல்ல அதன் காரணமாக மஞ்சுளாவை பிரிந்தாலும் அவளால் தூண்டப்பட்ட ஆர்வத்தை பிரியவில்லை.

பொதுவாக அவனுக்கு திணிக்கப்படும் எதுவும் பிடிப்பதில்லை, ஆனால் அங்கே எல்லா ஆசிரியர்களும் திணிப்புமுறையிலேயே கல்விபுகட்டினர் ஒரே ஒருவர் தவிர, அவர் ஓவிய ஆசிரியர். எந்த வீட்டுப்பாடத்தையும் ஒழுங்காக செய்ய மறுக்கும் அவன் ஓவியங்களை மட்டும் ஒழுங்காக வரைந்துவிடுவதால் அவரின் அன்புக்கு பாத்திரமானான். படிப்பிலும் பண்பிலும் சிறந்த மாணவன் அவன் என அவர் நினைத்தார். அத்தோடு விட்டிருக்கலாம், அதை ஒருநாள் வகுப்பில், "மாணவன்னா இவனைப்போல இருக்கணும் எப்படி எல்லா விசயத்திலும் சரியாக நடந்துகொள்கிறான் பார்", என்று சொல்லவும் செய்தார்.

வகுப்பறையே கொல்லென சிரித்துவிட்டது. "சார், அவன் ஒழுங்கா வீட்டுப்பாடம் செய்யாமல் ஒவ்வொருமுறையும் அடிவாங்குவான் சார், அவன் ஒழுங்காக இருக்கறது உங்க கிளாஸ்ல மட்டுந்தான்", என ஒரு மாணவன் எழுந்து நின்று பொறுமையாய் விளக்க, முகம் தொங்க நின்ற அவனின் பிம்பம் மனதில் நொறுங்க, அவர் பார்த்த பரிதாபப்பார்வையை அவன் ஆயுளுக்கும் மறக்கமாட்டான்.

புதிதாக வேறு பகுதியில் வீடுகட்டுவதால் அதற்கருகில் உள்ள பள்ளியில் அவனை 7ஆம் வகுப்பு சேர்த்துவிட முடிவு செய்த தந்தை TC வாங்குவதற்காக தலைமை ஆசிரியரை சந்தித்து பேசினார். சிறந்ததென பெயரெடுத்த இந்த பள்ளியை விட்டு அருகிலுள்ள காரணத்தால் ஏன் அரசுப்பள்ளியில் சேர்கிறீர்கள், இதனால் அவன் படிப்பு கெடுமே என வினவிய தலைமை ஆசிரியரை சமாதனப்படுத்தி ஒரு வழியாக சம்மதம் பெற்றுக்கொண்டார்.

அந்தப்பள்ளியில் கடைசி நாள், அங்கே எதுவுமே பிடிக்காவிட்டாலும் அந்த ஓவிய ஆசிரியருக்காக அவன் அப்பள்ளியை நேசித்தான்.

முகப்பு தோற்றத்தை அப்படியே பென்சில் கொண்டு ஓவியமாய் வரைந்துகொண்டான், அவனுள் ஏனோ பொங்கிய துக்கம், அவ்வொவியத்திற்கு இரண்டு கண்ணீர் புள்ளிகளை பரிசாக வழங்கியது

(தொடரும்)

கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு