கனவுலகம்-2

எந்தப்பள்ளியில் அவன் படிப்பு கெடும் என்று சொல்லப்பட்டதோ அந்த அரசுப்பள்ளியில்தான் அவனுடைய படிப்பு பலப்பட்டது.

அவன் இதுவரை படித்த பள்ளியின் பெருமைகளும், அவனின் தோற்றமும், சிறந்த படிப்பாளி எனும் பிம்பத்தை சகமாணவர்களிடையே ஏற்படுத்தியது. முதல் இரு நிலைகளில் உள்ள மாணவர்கள் தங்கள் இடத்துக்கு ஏதும் ஊறு நேர்ந்துவிடுமோ என்று அனாவசியமாக பயந்தனர்.

அங்கே அவனை கண்டிக்கவும் தண்டிக்கவும் ஆள் இல்லை. மாறாக அவன் நன்றாக படிப்பான் என நம்பினர், அந்த நம்பிக்கையை வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினர். இறுக்கமற்ற இந்த புதிய சூழலும் தன் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையும் அவனை மாற்றின. நம்பிக்கையை மீண்டும் ஒரு முறை உடைக்க அவன் தயாரில்லை அந்த வலியை உணர்ந்திருந்ததால் தன்னை தகுதியானவனாய் மாற்றிக்கொள்ள முற்பட்டான்.

அறிவியல் ஆசிரியைக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது, அதனால் அறிவியல் பாடத்தை முதல் நாளே படித்துவிட்டு கேள்விகளுக்கு தயாராக வகுப்புக்கு செல்வான். ராக்கெட் பற்றிய பாடம் என்றால் ஊதுபத்தி அட்டையில் ஒரு ராக்கெட் மாதிரி செய்து வகுப்புக்கு எடுத்துச்செல்வான். இப்படியே அறிவியல் மெல்ல புரிபடவும் ஆர்வமூட்டவும் ஆரம்பித்தது.

இந்த கால கட்டத்தில் அவனுடைய தந்தை அவனுக்கு நூலகத்தை அறிமுகப்படுத்த, சிறுவர் கதைகளை ஆர்வமுடன் படிக்க துவங்கினான். வாண்டுமாமாவின் கதைகள், தெனாலிராமன் கதைகள், நீதிக்கதைகள், பீர்பால் கதைகள், மாயாஜாலக்கதைகள் என அவன் பட்டியல் நீண்டது.

எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் அவன் தந்தை அவனை நூலகத்திற்கு அழைத்துச்சென்றார். இம்முறை வழக்கம் போல சிறுவர் பகுதியில் புத்தகம் எடுக்காமல் வேறு ஏதாவது புத்தகம் எடுக்க அவன் விரும்பினான். அவ்வளவு பெரிய நூலகத்தில் தான் படிக்கும் கதைகள் அல்லாமல் வேறு என்னவகை புத்தகங்கள் இருக்கும் என பார்க்க நினைத்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக புத்தகங்களை உருவினான் அவை ஆர்வமூட்டாதவையாகவோ புரியாதவையாகவோ இருந்தன. அவனை ஈர்த்தது, "வால்வுகள்" எனும் புத்தக தலைப்பு. அவனுக்கு தெரிந்ததென்னவோ சைக்கிள், டயர், டியூப், அந்த டியூபிலுள்ள வால்வுதான். இதைப்பற்றி இவ்வளவு பெரிய புத்தகமா? என்னதான் இருக்கிறதென்று படித்துவிடுவது என முடிவு செய்துகொண்டான்.

அதற்கும் சிறுவயதில் தனக்கு ஆர்வமூட்டிய கார்ட்டூன் படங்களுக்கும் தொடர்பு இருக்கும் என அவனால் சிறிதளவும் ஊகிக்க இயலவில்லை

(தொடரும்)

கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு