கனவுலகம்-3

"வால்வுகள்" எனும் அப்புத்தகம் மின்னியலிலிருந்து மின்னணுவியல்(electronics) கிளர்த்தெழுந்த வரலாறை விவரித்தது.

மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டபின் தொடர்ந்த ஆராய்ச்சி வால்வுகளின் கண்டுப்பிடிப்புக்கு அடிகோலியது.

ஒரு சிறு வேறுபாடிருந்தால் அதை பெரிதுபடுத்துவதென்பது மனித குலத்துக்கு புதிதன்று. அதனால் தீமை மட்டுமே விளையும் என கண்டிருந்தார்கள்

வால்வுகளை பயன்படுத்தி சிறு மின் அதிர்வுகளை பெரிதுபடுத்த முடிந்தது. அதைக்கொண்டு சிறிய ஓசைகளை பெரிதுபடுத்தும் ஒலிப்பெருக்கிகள், வானோலி போன்றவை ஏற்படுத்தப்பட்டன.

பரிட்சை நேரத்தில் பக்கத்து வீட்டில் அலறும் ஒலிப்பெருக்கிகளால் பாதிக்கப்பட்டோர் அவைகளால் விளைவது தீமையே என்று அப்போதைக்கு சொன்னாலும் நன்மைகளை உணராமல் இல்லை

வால்வுகளின் நிகழ்ந்த ஒவ்வொரு கண்டுபிடிப்பும் நேரில் பார்ப்பது போல வெகு அழகாக விவரிக்கப்பட்டிருந்தது. அவன் ஆவலோடு மொத்த புத்தகத்தையும் சீக்கிரமே படித்து முடித்துவிட்டான்.

"இப்படி ஒவ்வொரு கண்டுபிடிப்பும் நிகழ்ந்தவிதம் உள்பட விவரிக்கப்படும்போது எவ்வளவு ஆர்வத்தை தூண்டுவதாக அமைகிறது. நம் அறிவியல் பாடங்கள் ஏன் இத்தனை ஈர்ப்பதாக இல்லை?", என சிந்தித்தான்.

தானும் ஒரு கண்டுபிடிப்பாளனாக வேண்டும் எனும் எண்ணம் வலுப்பெற்றது. மேலும் இதுபோன்ற புத்தகங்களை தேடிப்படிக்க துவங்கினான். மின்னணுவியல் அவனை மெல்ல ஈர்த்தது.

படித்தவற்றை நேரில் காணும் ஆவல் மிக, வீட்டில் சிறு கோளாறுகளுடன் இயங்கிக்கொண்டிருந்த பழைய வானொலியை பிரித்து ஊமையாக்கினான், அத்துடன் நில்லாமல் உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டில் அரைகுறையாக இயங்கிக்கொண்டிருந்த மின்னணு சாதனங்களை முடிந்தவரை நிரந்தரமாக நிறுத்தினான். அதிஷ்டவசமாக அவற்றில் சில வேலை செய்ததால் தொடர்ந்து பிரித்துப்பார்க்க ஏதாவது கிடைத்தபடி இருந்தது.

"நீதாண்டா சரிபார்க்கணும்", என்று வந்ததெல்லாம் கைதேர்ந்த பழுதுபார்க்கும் நிபுணர்கள் கைவிரித்த பின்புதான் அவனை அடைந்தன என்பதை வெகுநாட்கள் கழித்துதான் தெரிந்துகொண்டான்.

இதுவரை மற்றவர்கள் தன்மீது வைக்கும் நம்பிக்கையின் உதவியால் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டவனுக்கு தன்னை வேறு விதமாகவும் தூண்ட முடியும் என்று ஒன்பதாம் வகுப்பில் பாடம் நடத்த வந்த தலைமையாசிரியர் புரிய வைத்தார்.

வாயில் என்னேரமும் வெற்றிலை குதப்பியபடி எச்சில் தெறிக்க பேசும் அவர். ஒரு மாணவனிடம் கேள்வி கேட்டு பதில் வராவிட்டால் வாயிலிட்டு நன்கு உளப்பிய விரல்களைக்கொண்டு கன்னத்தை கிள்ளுவார், வலியோடு அருவருப்பும் சேர்ந்துகொள்ள மாணவனின் முகம் அஷ்டகோணலாவதை ரசிப்பார். தடியடி நடத்துவதிலும் பெயர் பெற்றவர் என்பதால் மாணவர்கள் சற்று நடுக்கத்துடனே அவர் வகுப்பை எதிர்கொள்வர்.

அவருக்கு ஏனோ அவனை பிடித்துவிட்டது. அதன் விளைவாக சரியாக பதில் சொன்னாலும் அவன் கன்னம் கிள்ளப்பட்டது, என்ன கொஞ்சம் வலிக்காதபடி கிள்ளுவார் வேறுபாடு அவ்வளவுதான். அவனை சீண்டுவது அவருக்கு பேரானந்தம். இவனுடைய மின்னணுவியல் திறமை(?!) பற்றி கேள்விப்பட்ட அவர் ஒருநாள் அவனை அழைத்து பேசினார், "உன்னால ரிப்பேர்தான் செய்ய முடியும், ஒரு முழு ரேடியோவை நீயே அசெம்பிள் செஞ்சு பாடவைக்க முடியுமா?"

"சார்! கண்டிப்பா முடியும்", தன்னம்பிக்கை சிகரமாக இவன்.

"டேய், அதெல்லாம் ஒன்னும் முடியாதுடா!", மீண்டும் மீண்டும் சொன்னார்.

இவனுக்குள் சாதித்துகாட்டும் வெறி தீயாய் பற்றிக்கொண்டது.

அப்புறம் அந்த வால்வுகளுக்கு என்னதான் ஆயிற்று? பழங்கால வானொலிகளில் இடம் பெற்றிருந்த வால்வுகளின் இடத்தை பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட டிரான்ஸிஸ்டர்கள் பிடித்துக்கொண்டன. ஏனெனில் அவை குறைவான வெப்பத்தை வெளியிட்டதொடு, குறைவான மின்சாரத்திலேயே இயங்கின.

அப்படியானால் வால்வுகள் அழிந்தே போயினவா? இன்றைய பயன்பாட்டில் அவை இல்லவே இல்லையா?

(தொடரும்)

கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு