கனவுலகம்-5

அந்த ஆச்சரியம் ஏற்பட அவனுக்கு நண்பனும் எதிரியுமாக(?!) ஏற்கனவே அறிமுகமாயிருந்த மாதவனும் ஒரு காரணம். அவர்கள் எப்போதும் ஒன்றாகவே இருந்தார்கள், எதிரெதிராக விவாதித்தபடி. இவன் சொல்லும் எந்த கருத்துக்கும் எதிர் கருத்தோடு தயாராக இருப்பான் மாதவன். மணிக்கணக்காக நீண்டு செல்லும் இத்தகைய விவாதங்கள் இவன் தன் கருத்துக்களை வலுப்படுத்திக்கொள்ள உதவின.

பாடதிட்டத்தில் இல்லாதபோதும் தன்னுடைய சொந்த முயற்சியாலும் ஆர்வத்தாலும் கணினிகளை தருவித்திருந்த பயிலக முதல்வர் திரு.இராமன், அவற்றை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த விழைந்தார்.

ஐந்து நபர் குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்த வகுப்பினரிடையே இரு குழுக்களுக்கு மட்டுமே கணினி பயில தகுதி அடிப்படையில் வாய்ப்பு. மாதவன் படிப்பாளியாக இருந்ததால் அவனோடு சேர்த்து இணைபிரியாத இவனுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மின்னியியல் போலின்றி கணினியில் கைமேல் பலன் உடனடியாக, அவன் மின்னியியலை விட்டுவிட்டு மின்னியியலின் வளர்ச்சியால் விளைந்த கணினியை பற்றிக்கொண்டான்.

மாதவன் வெகுதொலைவிலிருந்து பேருந்தில் வருவதால் வகுப்பை தவறவிடாமல் இருக்க சீக்கிரமே வந்துவிடுவான். முதல்வரும் சீக்கிரமே வந்துவிடுவதால் கணினி அறையை திறந்து மாதவனுக்கு மேலும் நாலு கட்டளைகளை சொல்லித்தந்துவிடுவார். அதை வைத்துக்கொண்டு மாதவன் செய்யும் அட்டகாசம் இவனால் தாங்க முடியாது.

"இதொ பாரு உனக்கு டைப்பிங்கும் தெரியாது, கமாண்டுங்களும் தெரியாது. பேசாமெ பக்கத்துல உக்காந்து உன் புரொக்கிராம படி! நான்தான் டைப் செய்வேன்", என்று அடம் பிடித்தான். இதனால் மேலும் தூண்டப்பெற்ற இவன், தானும் அதிகாலையில் வரத்துவங்கினான்.

இருவரும் வகுப்பில்லாத ஒவ்வொரு இடைவேளையிலும் கணினி அறையில் தவம் கிடந்து ஜிடபிள்யூ பேசிக் (GW Basic) எனும் கணினிமொழி பயின்றனர். இப்படி கிடைத்த உபரி நேரத்தை மேலும் பயன்படுத்திக்கொள்ள நினைத்த இவன் தாய விளையாட்டை கணினியில் புகுத்த முடிவுசெய்தான். அவர்களின் விவாதம் தொடங்கியது.

"இரண்டு பேர் தாயம் விளையாடுற மாதிரி செய்யணும், தாயக்கட்டையை உருட்டுறதுக்கு பதிலா கம்ப்பூட்டர் ரேண்டம் நம்பர் ஜனரேட் பண்ணும், எந்த காயை நகர்த்தணும்னு சொன்னால் அதுவே நகர்த்தும்", கற்றுக்கொண்ட கட்டளைகளை செயல்படுத்திப்பார்க்கும் ஆர்வத்துடன் இவன்.

"அய்யே! ரண்டு பேர் வெளையாட நான் தரையில கட்டம் போட்டே விளையாடிடுவேன். கம்ப்யூட்டர்னா அதுவும் விளையாடணும், அதுதான் விளையாட்டு", பதிலுக்கு மாதவன்

அப்படியே செய்வதாக உறுதி எடுத்துக்கொண்டு மேலும் சிந்திக்கும் போது சில விஷயங்கள் அவனுக்கு புரிந்தது. மிக எளிமையானதாக தென்படும் தாயக்கட்டம் கூட, 'உண்டு', 'இல்லை' என்று உடைத்துச்சொன்னால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய கணினியில் புகுத்துவது அவ்வளவு சுலபம் இல்லை. நாம் விளையாடும் பொழுது எப்படி வேண்டுமானால் விளையாடலாம் ஆனால் கணினி விளையாடினால் அதன் ஒவ்வோர் அசைவும் மிகச்சரியாக இருக்கவேண்டுமல்லவா. உதாரணத்துக்கு கீழ்கண்ட சிக்கலை எடுத்துக்கொள்வோம்

நம்மிடமுள்ள நான்கு காய்களில் இப்போது விழுந்துள்ள எண்ணைக்கொண்டு ஒன்றை வெட்டுப்படாமலிருக்க மலை சேர்க்கலாம், இன்னொன்று தன் சுற்றை முடித்துக்கொள்ள முடியும், மற்றொன்று எதிராளியின் காயை வெட்டமுடியும், அடுத்தது வெட்டுப்படும் வாய்ப்பிலுள்ளது என்று வைத்துக்கொள்ளுவோம்.

எது சிறந்த நகர்த்தல் என்பதை எப்படி முடிவு செய்வது? எதற்கு முக்கியத்துவம் தருவது?

ஒவ்வொன்றிக்கும் ஒரு முக்கியத்துவ எண் கணிக்கப்படவேண்டும். எப்படி கணிப்பது?

மலை சேர்க்க வாய்ப்புள்ள காய் தன் சுற்றில் எவ்வளவு பயணித்துள்ளது? இன்னும் எதிராளியின் எத்தனை நகர்த்தல்களில் அது வெட்டுப்பட வாய்ப்பு உள்ளது?

சுற்றை முடிக்க முடிந்த காய் வெட்டுபட வாய்ப்புள்ளதா அல்லது அதைவிட முக்கியமான நகர்த்தல் வேறேதும் உள்ளதா?

எதிராளியின் காயை வெட்ட இயலுமாயின் அது தன் பாதையில் எவ்வளவு தூரம் கடந்துள்ளது? அதிகம் கடந்திருத்தால் எதிராளிக்கு ஏற்படும் இழப்பு அதிகம் எனவே அதிக முக்கியத்துவம் தரப்படவேண்டும்

இப்படி இச்சிக்கலை பல சிறு துண்டுகளாக உடைத்து கையாளலாம்.

எடுத்துக்கொண்ட இப்பணியை ஒரு அறுபது சதம் முடிக்க மட்டுமே பயிற்சிக்காலம் அனுமதித்தது. பின்னர் அவர்கள் வெவ்வேறு தொழிற்சாலைகளில் நேரடி பயிற்சி பெற செல்ல வேண்டியிருந்தது.

அதற்கு முன் ஒரு நாள் அவன் உணவு இடைவேளையின் போது மாதவனிடம் சொன்னான், "டிரெயினிங் முடிஞ்சு ஒரு வருசத்துல வேலைக்கு சேர்ந்திடணும், மாதம் ஆயிரம் ரூபாயாவது சம்பளம் கிடைக்கும் அதை அப்படியே சேர்த்து வைக்கணும். ஒரு வருஷம் அப்படி சேத்தா 12 ஆயிரம் கெடைக்கும், அந்த 12 ஆயிரத்துக்கெல்லாம் கம்ப்பூட்டர் வாங்க முடியும்னு சொல்றாங்க, எனக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கணும்".

ஆர்வத்தோடு அவன் சொல்லிக்கொண்டிருத்ததை வேறொருவர் தற்செயலாக கவனித்து கேட்டதையும் அதன் விளைவுகளையும் அப்போது அவன் அறியவில்லை.

(தொடரும்)

கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு