அ.பு.பயிற்சி-2: நுண்ணுணர்வு

என் பெயர் அனந்த ராமன், ராமன் பெயரில் மட்டுமே. குஷாலாக என் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இந்த குட்டி எனக்கு ரயில் பயணத்தில் வழித்துணை மட்டுமே. மதராஸிலிருந்து டெல்லிக்கு போக நாற்பத்தைந்து நிமிடம் ஆகிறதே, அவ்வளவு நேரம் சும்மா இருக்க முடியுமோ! இறுக்கமான அணைப்பு, அழுத்தமான முத்தம், சில தடவல்கள் அவ்வளவுதான். ஊர் வந்துவிட்டால் நான் வேறு அவள் வேறு. இப்போதெல்லாம் பரவாயில்லை, இந்த அதிவேக ரயில் சேவை வருவதற்கு முன்பெல்லாம் டெல்லி போக இரண்டரை மணி நேரம் ஆகும், அவசரம் என்றால் விமானமோ ஹெலிபேடோ பிடித்து போக வேண்டியதுதான். எனக்கு அந்தப் பயணமே பிடிப்பதில்லை.

மின் காந்தங்களின் உதவியால் காற்றில் மிதப்பது போல பறக்கும் இந்த நவீன ரயிலை தான் தான் புழக்கத்துக்கு கொண்டு வந்தது என்று சொல்லியே ரயில்வே மந்திரி இரண்டாம் முறையாக பதவியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் இந்த சாதனையில் எனக்கும் பங்குண்டு. ஆளில்லாமல் இயங்கும் இந்த ரயில்வண்டியினை இயக்கும் ஆணைத்தொடர்களில் சிலவற்றை நானும் எழுதியிருக்கிறேன்.

தொடர்ச்சியாக யோசிக்கவிடாமல் தொடைமீது கையை பட்டுப்பட்டென்று போடுகிறாள், எனக்கு ஜிவ்வென்று ஆகிவிடுகிறது. இந்த ஜீன்ஸ் பேண்டில் பாக்கெட் எதற்கு வைக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்னுடைய உடலின் உணர்வு முடிச்சுக்கள் அத்தனையும் இவளுக்கு அத்துப்படி. இப்படித்தான் ஒருமுறை ஏடாகூடமாகி ஆபிசுக்கு போகாமல் படகு வீட்டை வாடகைக்கு எடுக்க வேண்டியிருந்தது.

என் மனைவியெல்லாம் எனக்கு ஒரே மாதத்தில் அலுத்துவிட்டாள், இன்னும் தொடர்பில் இருக்கும் மற்ற ஆறு பெண்களைவிட இவள் அதிகம் அலுப்படிக்காமல் இருக்கிறாள். ஒரு வீணையை கையாளும் லாகவம் இவளின் செயலில் இருக்கிறது. வீணை என்றதும் நினைவுக்கு வருகிறது எனக்கு இந்த ஒலி லயங்களை ரசிக்க பிடிக்கும். கண்ணாடி சில்லுகள் போன்ற வடிவத்தில் சுவரோடு சுவராக பொருந்தி நிற்கும் இருபத்தி ஏழு ஸ்பீக்கர்கள் கொண்ட புத்தம் புதிய ஒலி அமைப்பை பொருத்தியிருக்கிறேன், வின்சைல் ஹவாண்டியின் பீட்டில்ஸ் அதில் கேட்க வேண்டுமே, அடாடா! அப்படியே சொக்கி விடுவீர்கள். எனக்கு ஒலியில் துளி கூட பிசிறு இருக்கக்கூடாது. இங்கே சன்னமாக கேட்கும் உராய்வு ஒலி கூட என் காதுகளுக்கு தப்ப முடியாது. எதிரே இருந்த திரையில் மேற்கத்திய இசைத்தொகுப்பிலிருந்து ஒரு பாடல் சோகையாக வழிந்து கொண்டிருந்தது. இந்த ஒலி வேறு, இது தனியே கேட்கிறது.

என் உடலில் ஊர்ந்த அவளின் விரல்களை பிடித்து நிறுத்தினேன், எதிரே லஜ்ஜை கெட்டத்தனமாக எங்களையே வெறித்துக்கொண்டிருந்த இரண்டுங்கெட்டான் வயசுக்காரனால் கூட என் கவனத்தை திசை திருப்ப முடியவில்லை. என் மனதில் 'உராய்வே இல்லாமல் இயங்கும் இந்த ரயிலில் உராய்வு ஓசை எங்கிருந்து, ஏன், எப்படி வருகிறது', என்ற கேள்வியே சுற்றி சுற்றி ஓடியது.

பெங்களூரில் ரயில் நின்றபோது இன்னொரு மாறுபாட்டை கவனித்தேன். ரயில், நிலையத்தில் நிற்கும் போது, நிலையத்தில் உள்ள கதவுகளும் ரயிலில் உள்ள கதவுகளும் ஒரு சேரத்திறந்து பயணிகள் உள்நுழைய, வெளியேற வழி விடவேண்டும். இம்முறை நிலையக்கதவுகள் திறந்து சிறிது காலம் கழித்தே உட்கதவு சற்று சிரமத்துடன் திறந்தது, "கதவுகள் மூடப்படப்போகின்றன, தயவு செய்து இடையில் நிற்கவேண்டாம், கதவுகள் மு", என்று ஒலித்த அறிவிப்பு சில கிலோஹெர்ட்ஸ் வித்யாசத்தில் பெண்மையிழந்து ஆண்மையின் கனத்துடன் ஒலித்தது. தவிர இரண்டாம் முறை இந்த அறிவிப்பு அரைகுறையாக ஒலிக்க அவசியமில்லை.

வேறு யாரும் இதைப்பொருட்படுத்துவதாக தெரியவில்லை. ஆணைத்தொடரின் மூலத்தை பார்த்தவன் என்ற முறையில் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்,இது இயல்பான செயல்பாடு இல்லை ஏதோ விபரீதம் இருக்கிறது! என்னுடைய அதிர்ச்சியை கூட்டும் விதத்தில் ரயில் ஒரு உலுக்கு உலுக்கியது, என்ன தான் நடக்கிறது?

* * * * * * * * * * * * * * * * * *

இனி இதை எப்படி தொடரப் போகிறீர்கள்?

கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு