அ.பு.பயிற்சி-1: அதிர்வுகள்

இந்த உலகம் அழகானது, அதே நேரத்தில் அசிங்கமானதும் கூட என்கிறார்கள். நான் இனிமேல்தான் பார்க்கவேண்டும், இன்னும் சற்று நேரத்தில் கட்டு அவிழ்க்கப் போகிறார்கள். இதோ டாக்டர் கூட வந்துவிட்டார்.

"மாலினி, சற்று நேரத்தில் உன் கண் கட்டை அவிழ்க்கப் போகிறேன். உன் விழிகளை மெல்லத்திறந்து ஒளியை உள்ளே கசியவிடு. சற்று உறுத்தலாக இருக்கும், பிறகு சரியாகிவிடும். அதிக உறுத்தல் இருந்தால் சொல்"

பாட்டி பக்கத்தில் இருக்கிறார், எதிர்வீட்டுப் பெண்ணும் வந்திருப்பதை ஒலியால் உணர்கிறேன். கட்டு நீங்கியதும் என் விழித்திரையை மெல்ல விலக்கினேன். இத்தனைநாள் நான் பார்த்த இருட்டை புரட்டிப்போட்டாற்போல ஒளி, என் கண்ணே பொசுங்கிவிடும்போல, சூரீர் என்று ஒரு வலி. தாங்கமுடியாமல் போகவே விழியை மூடிக்கொண்டேன்.

"எல்லாருக்கும் முதல் முறையே வெற்றி கிடைத்துவிடுவதில்லை, இருபது வருடமாக இருட்டையே உணர்ந்திருந்த மூளை இந்த தகவல்களை வாங்கி உணர சற்று காலம் தேவைப்படுகிறது, சில மருந்துகள் தருகிறேன் மீண்டும் நாளை முயற்சிப்போம்"

டாக்டர் அகன்று விட்டார், நடையொலி மெல்லத்தேய்ந்து அடங்கிவிட்டது. நான் நர்சின் உதவியுடன் படுக்கைக்கு திரும்பினேன். பக்கத்துப்படுக்கையில் மார்கரெட் ஆன்டி இன்னும் அனத்திக்கொண்டிருந்தார். நோயின் தாக்கம் அதிகமாகிவிட்டது போலும். அவர் என்னிடம் பேசியதில்லை, அவருடைய மகள் வரும்போதெல்லாம் என்னையும் விசாரிக்காமல் போனதில்லை.

பாட்டி இன்று வீட்டுக்குப் போய்விட்டாள். பல சிந்தனைக்கள், ஒளியில்லாக் கனவுகள், நேரம் நீண்டுகொண்டே போவது போல இருந்தது, பின்னர் ஒரு வழியாக உறங்கினேன்.

ஆஸ்பத்ரியின் ஆரவாரம் சுத்தமாக இல்லை, நள்ளிரவாக இருக்கலாம். எனக்கு தூக்கம் கலைந்துவிட்டது. இருள் மட்டுமே இருந்ததால் அவிழ்ந்து போன கட்டை கழற்றி என் கண்களை திறக்க முயற்சித்தேன். இப்போது உறுத்தல் இல்லை, கண்களில் விடப்பட்ட திரவங்கள் காரணமாக இருக்கலாம். வழக்கத்துக்கு மாறாக மார்கரெட் ஆன்டியின் குறட்டை ஒலியோ முனகலோ இல்லை. அறையின் வாயிலில் வழியும் ஒளியை தடுத்தபடி ஒரு உருவம் மங்கலாக தெளிவற்று தெரிந்தது. ஒலிகளால் ஏதும் உணர முடியவில்லை.

"யாரது?"

பதிலில்லை, நான் சற்று நெருங்கி தொட்டு உணர முயன்றேன். அருகில் செல்லச் செல்ல விலகுவதுபோல இருந்தது, சன்னமான நடையொலி அறையின் இன்னொரு புறம் கேட்கிறது, ம்... எனக்கு தெரியும் இது மார்கரெட் ஆன்டியின் நடை. சற்று இழுந்தாற்போல நடப்பார். ஒலி என்னை சற்று நெருங்கியது. கலங்கலாக அவர் உருவத்தை முதல் முறையாக பார்க்கிறேன்.

"எப்படி இருக்கிறது உடம்பு?", என்றேன்

"குளிர்கிறது", என்றார் தடுமாற்றமான குரலில், பின்னர் என்னை கடந்து நீள தாழ்வாரத்தில் காணாமல் போனார்.

நான் அறைக்கு திரும்பி உறக்கத்தை தொடர்ந்தேன். காலையில் உறக்கம் கலைந்த போது, சந்தடி வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. என்னுடைய கட்டை இறுக்கிய நர்சின் நர்சின் கைகளை பிடித்துக்கொண்டேன்.

"நேற்று இரவு மார்கரெட் ஆன்டியை பார்க்க வந்தது யார்?"

"இரவில் விசிட்டர்களுக்கு அனுமதியில்லை என்று உனக்கு தெரியாதா?"

"இல்லை, அவருடன் ஆன்டியும் போனார்கள். அதனால் தான் கேட்கிறேன்"

"வாய்ப்பே இல்லை, நேற்று நள்ளிரவில் ஆன்டி இறந்துவிட்டார்"

* * * * * * * * * * * * * * * * * *

இந்த இடத்திலிருந்து இதை ஒரு பேய்க்கதையாக தொடர்வது எளிது

ஆனால் அறிவியல் புனைகதையாக தொடரவேண்டும்

எப்படி தொடரப்போகிறீர்கள்?

கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு