சிங்கையிருந்து சென்னைக்கு-2

ஒரு பயண அனுபவம் (தொடர்கிறது)
எனக்கு அருகில் அமர்ந்திருந்தவர்களை கவனித்தேன், ஜன்னலை ஒட்டி நான், எனது பக்கத்து இருக்கையில் ஒரு முஸ்லிம் பெண்மணி, மத்திய இருக்கையில் ஒரு சீக்கியர் எல்லாரும் அவர் அவர் வேலையை மட்டும் பார்த்தபடி.

மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களை தனித்தீவாக உணர்ந்து சுற்றியிருக்கும் மற்றவர்களோடு ஒட்டாமல் இருக்கும் சூழலைப்பற்றி நினைத்துக்கொண்டேன். இயந்திர வாழ்க்கையில் பெரும்பாலோர் அப்படித்தான் ஆகிவிடுகிறார்கள். உதட்டளவில் சிரித்து உள்ளத்துக்கு திரையிட்டு பட்டும்படாமல் பழகுவர்.

இந்தத்திரை எப்போது விலகும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, இப்படித்தான் என்று காண்பிப்பது போல முன்வரிசையில் ஒரு வாண்டு (வயது 2 அல்லது 3 இருக்கலாம்) இருக்கையில் எழுந்து நின்றபடி எங்கள் பக்கம் திரும்பி தன் பிரசங்கத்தை ஆரம்பித்தது, தனக்கு மட்டுமே புரியக்கூடிய மொழியில் உலக வாஞ்சை அத்தனையும் குழைத்து, தனக்கென அணிதிரண்ட கூட்டத்தைக்கண்ட தானைத்தலைவனென முழங்கிக்கொண்டிருந்தது. மிகவும் தீவிரமான பாவனைகளுடன் முக்கிய உரையாற்றிக்கொண்டிருக்கும் அந்த சிறுவனின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியது. உள்ளத்திலிருந்து வரும் புன்சிரிப்புடன் அனைவரும் பதிலுக்கு தலையாட்டிக்கொண்டிருந்தனர்.

நினைத்துக்கொண்டேன், மழலைகளால் இந்ததிரையைத்தாண்டி உள்ளத்தை சென்றடைய முடிகிறது.மழலைப்பருவத்தைப்பற்றி சிந்தனை தொடர்ந்தது. நம் வாழ்வின் பொற்காலம், எந்த பொறுப்புகளும், கவலைகளும் இல்லாமல் முகமூடியின்றி உலா வந்த நாட்கள். என் நண்பன்அடிக்கடி சொல்வான், "நம் வாழ்வின் உன்னத காலம் அது என்பதை உணரும் முன்னரே அதைக்கடந்துவிடுகிறோம்" என்று. உணராது இருந்ததாலேயே அது பொற்காலமாக இருந்திருக்கலாம் என்று அப்போது நினைத்துக்கொள்வேன்.

உறைபோடா உள்ளம் சேர வேறு என்ன வழி? சிந்தனை திசை மாறியது.

மனத்திரையைத்தாண்டி ஊடுருவும் ஊடகங்களில் மடற்குழுங்களின் பங்கு கணிசமானது. இங்கே வசதி என்னவென்றால் திரையின் தேவையான பகுதிகளை மட்டும் விலக்கலாம் மற்றவற்றை விட்டுவிடலாம். அந்தரங்கம் பாதிக்கும் என்று நினைப்பவர்கள் திண்மையான முகமூடியை கம்பீரமாக மாட்டிக்கொள்ளலாம். எந்தனை பேரின் உள்ளக்கிடக்கை காணமுடிகிறது, எவ்வளவு பேருக்கு உள்ளத்தை திறந்து காண்பிக்க முடிகிறது, கனவுகளையும் கவலைகளையும் பரிமாறிக்கொள்ள முடிகிறது. கருத்துக்களை விவாதிக்க முடிகிறது. கிட்டத்தட்ட இன்னொரு மெய்நிகர் வாழ்க்கையாகவே மாறிவிட்டது.

அரிதாகக்கிடைக்கும் ஓய்வு நேரத்தை குடும்பத்தாருடன் கழிப்பதை விட்டுவிட்டு அப்போதும் கணினிமுன் அமர்ந்து தட்டிக்கொண்டிருக்கும் நண்பர்களை பார்க்கும்போதே இந்த ஊடகத்தின் ஆற்றல் புரிகிறதே!

இப்படி பலதிசைகளில் பயணப்பட்ட என் சிந்தனையைக்கலைத்தது விமான ஓட்டியின் அவசர அறிவிப்பு!

(தொடரும்)

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
"¿õ Å¡úÅ¢ý ¯ýɾ ¸¡Äõ «Ð ±ýÀ¨¾ ¯½Õõ Óýɧà «¨¾ì¸¼óÐŢθ¢§È¡õ. ¯½Ã¡Ð þÕ󾾡§Ä§Â «Ð ¦À¡ü¸¡ÄÁ¡¸ þÕó¾¢Õì¸Ä¡õ "

uNmai thaan :(.
wrds
ka

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு