அ.பு.பயிற்சி-4: பேரழிவிற்குப் பின்...

அழிந்துவிட்ட உலகில் எஞ்சிவிட்ட என்னைப் போன்றவர்களுக்கு உயிரைப்பாதுகாப்பது தவிர வேறு எந்தப்பணியும் இருக்கவில்லை. ஆனால் அதைவிடச் சிரமமான பணி வேறெதுவும் இருக்கமுடியாது. நாட்களை என் கைகளில் கிழித்துக்கொண்ட கோடுகளைக் கொண்டுதான் அளக்கிறேன். கதிரியக்கத்தால் கருகி நிற்கும் தாவர வகைகளைத் தவிர வேறு ஒரு உயிரினத்தைக் கண்ணால் கண்டு இன்றோடு இருபத்தோரு நாட்களாகின்றன. நெடுந்தொலைவு நடந்து, அலைந்து திரிந்துதான் கதிரியக்கத்தால் ஒளிவீசாத சில பச்சை மரங்களைக் கண்டுபிடிக்க முடிகிறது. மிகுந்த சிரமத்துடன் அவற்றின் தண்டின் நடுப்பகுதியை மட்டுமே என் உணவாக்கிக்கொள்கிறேன், ஆனாலும் கதிரியக்கத்தின் பாதிப்புகள் என்னுள் ஆரம்பமாகிவிட்டதை உணரமுடிந்தது.

நீர் நிலைகளும் பாழடைந்திருந்தன. அனேகமாக நீர் வழியாகத்தான் என் உடல் பாதிப்படையத் தொடங்கியிருக்கவேண்டும். காற்றும் தன் பணியை செவ்வனே செய்துவருகிறது. மொட்டையடிக்கப்பட்ட வனாந்திரங்களின் வழியே என் தேடல் தொடர்கிறது. தூரத்தில் எங்கேனும் புகை கசிவதைப்பார்த்தால் உடனே ஏதேனும் ஆழ்நிலக்குடியிருப்போ பதுங்குகுழிகளோ கண்ணில் படுமா என்று அருகில் சென்று பார்க்கிறேன் அங்கே பதுக்கப்பட்டிருக்கும் உணவு என் வாழ்நாளை நீடிக்க உதவக்கூடும்.

ஒரு பக்கம் நிராசையாக இருக்கிறது எனக்கு, இப்படி வாழ்வைத்தொடர்ந்து நான் எதை சாதிக்கப்போகிறேன். உண்மையில் இத்தனை போராடுவதை விட அமைதியாய் ஓரிடத்தில் அமர்ந்து உயிரை விட்டுவிடலாம். நானும் முயற்சித்திருக்கிறேன், ஒரு குருட்டு முயல் என் தவத்தைக் கலைத்துவிட்டது.

இப்படி எண்ணங்கள் என்னை குத்திக் குதறி பல திசைகளில் இழுத்துச்சென்ற வேளையில் தற்செயலாகத்தான் ஒரு புகைக் காளான் குடை விரித்திருப்பதைப் பார்த்தேன். நிச்சயம் அங்கே ஏதோ இருக்கிறது. மரக்கத் துவங்கிவிட்டிருந்த காலை உதறி சக்தியை மீண்டும் நெஞ்சில் நிரப்பிக்கொண்டு புறப்பட்டேன். அருகில் நெருங்கியவுடன் அந்தப் பதுங்குகுழி காணக்கிடைத்தது. அதன் எஃகு கதவுகளை திறக்க, செய்த முயற்சிகள் வெற்றி தரவில்லை. முழுபலத்தையும் கைகளில் திரட்டி கைப்பிடியைப் பற்றி இழுத்தபோது திடீரென லகுவாக விடுபட்டது. நான் சற்றுத் தொலைவில் போய் விழுந்தேன்.


* * * * * * * * * * * * * * * * * *

இனி இந்தக்கதையை எப்படி தொடரப் போகிறீர்கள்?

கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு